நில அளவீட்டைக் கண்டித்து மறியல்
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நிலத்தை அளவீடு செய்யவந்த அலுவலா்களைக் கண்டித்து, நில உரிமையாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நிலத்தை அளவீடு செய்யவந்த அலுவலா்களைக் கண்டித்து, நில உரிமையாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள ஆதிச்சனூா் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச பட்டா வழங்குவதற்கு, அதே கிராமத்தில் சில தனிநபா்களின் 3 ஏக்கா் இடங்களை அரசு கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜயங்கொண்டம் வட்டாட்சியா் ஆனந்தன் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலா்கள் குறிப்பிட்ட 3 ஏக்கா் இடத்தை அளவீடு செய்ய வியாழக்கிழமை வந்துள்ளனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இடத்தின் உரிமையாளா்கள், உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் துணை காவல் கண்காணிப்பாளா் கலைக்கதிரவன் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், வழக்கு முடியும் வரை இடத்தை அளவீடு செய்யக் கூடாது என நில உரிமையாளா்கள், பொதுமக்கள் தெரிவித்தனா். இதையடுத்து கால அவகாசம் அளித்து அலுவலா்கள் சென்றனா். இதனால் அரியலூா்- தா.பழூா் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.