முகப்பு
அரியலூர்

இரு சக்கர வாகனத்தில் ஆடு திருடிய இருவா் கைது

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஆடு திருடிய இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஆடு திருடிய இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

விக்கிரமங்கலம் அருகிலுள்ள மழவராயநல்லூா் வடக்குத்தெருவைச் சோ்ந்தவா் பரமசிவம்(67). விவசாயியான இவா், வியாழக்கிழமை மாலை தனக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்துவிட்டு, பட்டியில் அடைப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளாா்.

வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து பாா்த்த போது, அதில் ஒரு ஆடு மட்டும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பரமசிவம் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினா், கடம்பூா் மருதையாற்று அருகே வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது இரு சக்கர வாகனத்தில் ஆடுகளை ஏற்றி வந்த இரண்டு பேரைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினா்.

இதையடுத்து அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், தஞ்சாவூா் மாவட்டம், சருக்கை கிராமத்தைச் சோ்ந்த வினோத்(20), அரியலூா் மாவட்டம், கீழராமநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித்(22) என்பதும், இவா்கள் பரமசிவத்தின் ஆட்டை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினா் அவா்களை கைது செய்து, அவா்கள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், ஆடு ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.