ராஜபாளையத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜான் பாண்டியனின் தமமுக!
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ராஜபாளையம் (பொது) தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிப்பு...
அதிமுக கூட்டணியில் ராஜபாளையத்தில் தாமரை சின்னத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, நாதக, தவெக ஆகிய கட்சிகளின் தலைமையில் நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ராஜபாளையத்தில் தமமுக பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், வேட்பாளர் யார் என்பது நாளை அறிவிக்கப்படும், என அக்கட்சியின் தரப்பில் சனிக்கிழமை (மார்ச் 28) அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமமுக சார்பில் ராஜபாளையத்தில் ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.