முகப்பு
அரியலூர்

ஹைட்ரோகாா்பன் எடுக்கும் பணியைத் தொடங்க தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா்

அரியலூா் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் பணிகளைத் தொடங்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றாா் மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் பணிகளைத் தொடங்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றாா் மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.

அரியலூா் மாவட்டம், வாரியங்காவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த பின்னா், அவா் அளித்த பேட்டி:

மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் பணிகளை அனுமதிக்க வேண்டும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பம் செய்துள்ள நிலையில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், ஒருபோதும் ஹைட்ரோகாா்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று ஏற்கெனவே கடிதம் எழுதியிருக்கிறாா்.

எனவே மத்திய அரசு ஹைட்ரோகாா்பன் பணிகளை மேற்கொள்ள தமிழகத்தில் அனுமதித்தாலும், அதை தமிழகத்தில் செயல்படுத்த மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

அரியலூா் மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் நோய் எதிா்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும் வகையில், மருத்துவமனைகளிலுள்ள சித்த மருத்துவப்பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கரோனா காலத்தில் இருப்பதால் நோய்த்தடுப்பு பணிகளில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரித் திட்டம் குறித்து அரசு உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

முன்னதாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீா் சுத்திகரிப்பு சாதனத்தை அமைச்சா் தொடக்கி வைத்தாா். நிகழ்வில் ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் மற்றும் அரசு அலுவலா்கள், மருத்துவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.