லாரி-கார் மோதல்: வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 2 பேர் சாவு
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே சாலைப்புதூரிலிருந்து கரூர் செல்லும் சாலையில் லாரி, கார் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த இருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே சாலைப்புதூரிலிருந்து கரூர் செல்லும் சாலையில் லாரி, கார் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த இருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (45). இவரது தந்தை பழனிசாமி, பெரியம்மா சுந்தராம்பாள் ஆகிய மூவரும் தங்களது காரில் ஊஞ்சலூர் அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, வேலாயுதம்பாளையத்துக்குத் திரும்பியுள்ளனர்.
சாலைப்புதூரிலிருந்து கரூர் செல்லும் சாலையில் வெள்ளைபாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது கரூரிலிருந்து தேங்காய் மட்டை ஏற்றிக் கொண்டு எதிரே வந்த லாரியின் வலதுபுறம் டயர் வெடித்து காரின் மீது மோதியுள்ளது. இதில், ரமேஷ், பழனிசாமி, சுந்தராம்பாள் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலமாக மூவரும் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சுந்தராம்பாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரமேஷ் உயிரிழந்தார். பழனிசாமி காயங்களுடன் உயிர்தப்பினார்.
இதுகுறித்து, கொடுமுடி காவல் துறை ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.