மமதாவே அடுத்த பிரதமர்; பாஜக ஆட்சியில் கலவரம் வெடிக்கிறது! - திரிணமூல் எம்பி பேச்சு!
மமதா பானர்ஜி அடுத்த பிரதமராவது உறுதி என திரிணமூல் காங்கிரஸ் எம்பி பேச்சு...
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அடுத்த பிரதமராவது உறுதி என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத், முதல்வர் மமதா பானர்ஜி அடுத்த பிரதமராவது உறுதி எனத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, புதன்கிழமை (மார்ச் 18) அவர் பேசியதாவது:
“தேர்தல் ஆணையத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவுமில்லை. பாஜக மீதுதான் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஏனெனில், தேர்தல் ஆணையம் பாஜகவின் வலது கையாகச் செயல்படுகிறது.
சமீபத்தில், மேற்கு வங்கத்தின் பெண் அமைச்சர் ஒருவர் தாக்கப்பட்டார். பாஜக் எந்த எல்லைக்கும் செல்லும். பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கும்பல் கொலைகள் நடக்கத் தொடங்குகின்றன, கலவரங்கள் வெடிக்கின்றன. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். 7 அல்லது 8 கட்டங்களாகக் கூட சட்டப் பேரவைத் தேர்தல்களை நடத்தட்டும் அவர்களால் மேற்கு வங்கத்தில் வெற்றி பெற முடியாது.
மேற்கு வங்கத்தில் தாங்கள் வெற்றி பெற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவினர் தவறாகக் கருதுகின்றனர். ஆனால், அது உண்மையல்ல மமதா பானர்ஜி அடுத்த பிரதமராக வரப்போகிறார் என்பது உறுதி. வங்கத்தில் அவர் செய்த பணிகளைக் கணக்கிட்டால், நாட்டின் எந்தவொரு முதல்வராலும் அவரது செயலுக்கு ஈடுகொடுக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
வரும் ஏப்ரல் மாதம் தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. 294 தொகுதி கொண்ட மேற்கு வங்கத்தில் போட்டியிடுவதற்கு 291 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.