இலவச கண் பரிசோதனை முகாம்: 600 பேர் பங்கேற்பு
பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 600 பேர் பங்கேற்றனர்.
பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 600 பேர் பங்கேற்றனர்.
அரிமா சங்கம் சார்பில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவசக் கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம், அரிமா சங்கத் தலைவர் ஜி.என். ஒஜீர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாசனத் தலைவர் மு. ராஜாராம், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலர் நீல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி முகாமை தொடக்கி வைத்து பார்வையிட்டார். தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசவன், மருத்துவர் ஆனந்தமூர்த்தி, கண் சிகிச்சை முகாம் மாவட்டத் தலைவர் பாண்டியராஜன், மண்டலத் தலைவர் மணிகண்டேஷ்வரன், வட்டாரத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.
முகாமில், கண்புரை உள்ளவர்கள், சர்க்கரை நோய், கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, கண்ணின் கருவிழியில் புண் உள்பட கண் தொடர்பான நோய்கள் மற்றும் குறைபாடு உடையவர்கள் என 600 பேர் கலந்து கொண்டனர். மருத்துவக் குழுவினர் கண்களை பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை இலவசமாக வழங்கினர்.
மேலும், 60 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. 300 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஏற்பாடுகளை, அரிமா சங்க நிர்வாகிகள் முரளிதரன், ராஜா, ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.