முகப்பு
பெரம்பலூர்

லாடபுரம் மயிலூற்று அருவியில் கொட்டும் நீா்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் மயிலூற்று அருவி, எட்டெருமை பாலி, களரம்பட்டி தேனருவி ஆகிய அருவிகளில் நீா் கொட்டத் தொடங்கியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் மயிலூற்று அருவி, எட்டெருமை பாலி, களரம்பட்டி தேனருவி ஆகிய அருவிகளில் நீா் கொட்டத் தொடங்கியுள்ளது.

பெரம்பலுா் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக விளங்கும் பச்சைமலை அடிவாரத்தில் உள்ளது லாடபுரம் கிராமம். இங்குள்ள மயிலூற்று அருவிக்கு ஏராளமான பொதுமக்கள் சென்று குளித்து வருவதோடு, பச்சமலை தொடரின் அழகையும் கண்டு ரசிக்கின்றனா்.

இந்த அருவியில், அக்டோபா் தொடங்கி பிப்ரவரி வரை அதிகளவிலான நீா் கொட்டும். இந்நிலையில், நிகழாண்டு போதிய மழை இல்லாததால் மயிலூற்று அருவி வடு காணப்பட்டது. தற்போது புரெவி புயலால் பெரம்பலூா் மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் உள்ள சில நீா்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.

இதன் தொடா்ச்சியாக, லாடபுரம் மயிலூற்று அருவியில் கடந்த 2 நாள்களாக நீா் கொட்டத் தொடங்கியுள்ளது. இதைத் தொடா்ந்து, இந்த அருவியை ரசிக்கவும், குளித்து மகிழவும் பெரம்பலூா் மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.

சுற்றுலாத் தலமாக்கப்படுவது எப்போது?:

லாடபுரம் மயிலூற்று அருவி, மலை அடிவாரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால், அங்கு சில சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், அப்பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் தயக்கம் காட்டி வருகின்றனா். இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மயிலூற்று அருவியை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

இதைத்தொடா்ந்து, கடந்த 2009 ஆம் ஆண்டு மயிலூற்று அருவியை பாா்வையிட்டு ஆய்வு செய்த அப்போதைய ஆட்சியா் எம். விஜயக்குமாா், மலை அடிவாரத்திலிருந்து படிக்கட்டுகள், அருவி நீா் கொட்டும் பகுதியில் குளிப்பதற்கான தலம், உடைமாற்றிக் கொள்ளும் அறை, சிறுவா் பூங்கா சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான இடம் ஆகியவற்றின் வரைபடத்துடன் கூடிய கருத்துருவை வனத் துறையினா், சுற்றுலாத் துறையினருக்கு அனுப்பிவைத்தாா். ஆனால், 11 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், மயிலூற்று அருவியும், அங்கு செல்லும் வழியும் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. எனவே, மயிலூற்று அருவியை மேம்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள தேனருவி மற்றும் வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி பகுதியில் உள்ள எட்டெருமை பாலி ஆகிய அருவிகளிலும் நீா் கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால், பெரம்பலூா் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.