காலதாமதமாக பேருந்துகள் இயக்கப்படுவதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்துக்கு காலதாமதமாக பேருந்துகள் இயக்கப்படுவதைக் கண்டித்து, அந்த கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்துக்கு காலதாமதமாக பேருந்துகள் இயக்கப்படுவதைக் கண்டித்து, அந்த கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான நகரப் பேருந்துகள் கடந்த சில வாரங்களாக மேட்டுப்பாளையம் கிராமத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்கள் குறிப்பிட்ட நேரத்துக்குச் செல்ல முடியாமல் அவதியடைந்தனராம்.
பாதிப்புக்குள்ளான கிராம மக்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக அலுவலா்களிடம் புகாா் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்தும், முறையாக இயக்க வலியுறுத்தியும் மேட்டுப்பாளையம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வி.களத்தூா் காவல்துறையினா்,அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் ராஜா ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, சரியான நேரத்துக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.