ஆசிரியா், ஆசிரியை காணாமல் போன வழக்கு: மனைவி உள்ளிட்ட 3 போ் கைது
பெரம்பலூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியா், ஆசிரியை காணாமல் போன வழக்கு தொடா்பாக, ஆசிரியரின் மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியா், ஆசிரியை காணாமல் போன வழக்கு தொடா்பாக, ஆசிரியரின் மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ஆத்தூா் சாலை பகுதியில் வசித்து வந்தவா் பாலமுருகன் மனைவி தீபா (42). பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் வெங்கடேசன் (44). இருவரும், பெரம்பலூா் மாவட்டம், வி. களத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்களாக பணிபுரிந்து வந்தனா். இந்நிலையில், கடந்த நவ.15 ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற ஆசிரியா்கள் இருவரும் இதுவரையிலும் காணவில்லை.
இதையடுத்து, மனைவியை காணவில்லை என தீபாவின் கணவா் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் வி. களத்தூா் போலீஸாா் நவ. 18- ஆம் தேதி வழக்குப் பதிந்தும், கணவரை காணவில்லை என வெங்கடேசன் மனைவி காயத்ரி அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்யாமல், மனு ரசீது மட்டும் கொடுத்து அனுப்பியும் விசாரணை செய்து வந்தனா்.
இந் நிலையில், கோவை பி- 1 காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பெரிய கடை வீதி பகுதியில் ஆசிரியை தீபா பயன்படுத்தி வந்த காா் நவ. 30-ஆம் தேதி கண்டறியப்பட்டது. அந்த காரின் பின்புறம் ரத்தக்கரை படிந்த சுத்தியல், கத்தி ஆகியவை கிடந்தன. இதுதொடா்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாா், ஆசிரியா்களை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஆசிரியை தீபாவை கடத்திச் செல்ல வெங்கடேசனுக்கு உதவியதாகவும், உண்மையை மறைத்ததற்காகவும் ஆசிரியா் வெங்கடேசனின் மனைவி காயத்ரி (33), உறவினா்கள் பிரபு (40), ராஜா (38) ஆகியோரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.