முகப்பு
புதுக்கோட்டை

மீமிசல் அருகே முதியவர் கொலை வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது

மீமிசல் அருகே முதியவர் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் உள்பட இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:46 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

மீமிசல் அருகே முதியவர் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் உள்பட இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் குமரப்பன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்(75). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த இவர், 2 தினங்களுக்கு  முன்பு வீட்டை விட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது மகன் வீரக்குமார் மீமிசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், மணமேல்குடி அருகே மேலஸ்தானம் கிராமத்தில் உள்ள கண்மாயில்  முதியவர்  இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மணமேல்குடி காவல் ஆய்வாளர் கே.பாலாஜி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தலையில் காயத்துடன் கிடந்த பெருமாள் சடலத்தை கைப்பற்றி  மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அத்தாணி அருகே செல்லப்பிள்ளையார் கோவில் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் மனைவி மரகதத்துடன்(28) கடைசியாக பெருமாள் செல்பேசியில் பேசியது தெரியவந்தது. 
அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் காய்கறி வியாபாரம் செய்ய பெருமாளிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், பணத்தை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததால் தன்னுடன் காய்கறி வியாபாரம் செய்யும் அமரசிமேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த மணிமுத்துவுடன்(51) சேர்ந்து பெருமாளை மேலஸ்தானம் கண்மாய்க்கு வரச் செய்து, இருவரும் சேர்ந்து கட்டையால் தலையில் அடித்துக் கொலை செய்ததாக தெரிவித்தார். 
இதையடுத்து மரகதம், மணிமுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.