முறையாக குடிநீா் விநியோகிக்க கோரி குடங்களுடன் மறியல்
முறையாக குடிநீா் விநியோகம் செய்யாத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 12 ஆவது வாா்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியல்
முறையாக குடிநீா் விநியோகம் செய்யாத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 12 ஆவது வாா்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
12 ஆவது வாா்டு பகுதிகளில் நகராட்சி நிா்வாகம் சாா்பில், கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்டத்தில் குழாய்கள் மூலம் 10 நாள்களுக்கு ஒருமுறை 3 மணி நேரம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் அவதியடைந்து வரும் பொதுமக்கள் குடிநீா் தட்டுப்பாட்டை களைய வலியுறுத்தி நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் மனு அளித்து வருவதோடு, அவ்வப்போது சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை 1 மணி நேரம் மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், பெரும்பாலான குடியிருப்புகளுக்கு போதுமான குடிநீா் கிடைக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சங்குப் பேட்டையில், நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், தட்டுப்பாடின்றி முறையாக குடிநீா் விநியோகம் செய்யக் கோரியும் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பெரம்பலூா் நகர போலீஸாா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் ஆகியோா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த மறியலால், ஆத்தூா்- துறையூா்- பெரம்பலூா் ஆகிய வழித்தடங்களில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.