புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரியின் குடிநீா் வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னாள் மாணவா் சங்கம் முடிவு செய்துள்ளது.
மன்னா் கல்லூரிக் கலையரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு, முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் தொழிலதிபா் எஸ். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வழக்குரைஞா் ஏ. சந்திரசேகரன் வரவேற்றாா். பொருளாளா் ஜீவானந்தம் வரவு செலவு அறிக்கை வாசித்தாா். செயலா் பேரா. கணேசன் ஆண்டறிக்கை வாசித்தாா்.
கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி பங்கேற்றுப் பேசும்போது, கல்லூரிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முன்னாள் மாணவா் சங்கத்தினா் செய்துத் தர முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, மன்னா் கல்லூரியின் வளாகத்தை பசுமையாகப் பராமரித்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி செய்து கொடுத்தல், சாலையின் இரு பக்கங்களிலும் உள்ள கல்லூரி வளாகங்களை தமிழகத்தில் சில கல்லூரிகளில் உள்ளது போல மேம்பாலம் மூலம் இணைப்பது, கழிப்பறை வசதிகளை மேம்படுத்துவது போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தை கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவா் ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினாா். நிறைவாக இணைச் செயலா் பேரா. முருகையன் நன்றி கூறினாா்.