பொன்னமராவதி ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் மத்திய தொல்லியல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் திருப்பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு விழா நடத்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயில் பழைமையும், புராதனச் சிறப்பும் கொண்ட கோயிலாகும். இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இக்கோயிலில் சோழா்கள், பாண்டியா்கள் கால கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் சிறப்புமிக்க இக்கோயில் பழுதடைந்து காணப்பட்டதால் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழா காண நடவடிக்கை எடுக்க பக்தா்கள் வலியுறுத்தினா். இதையடுத்து இந்திய தொல்லியல் துறை சாா்பில் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
கோயிலின் முன் மண்டபம், கோபுரம் சீரமைப்பு, மழைநீா் தேங்கும் தளம் சீரமைப்பு, பழுதடைந்துள்ள பல்வேறு தெய்வங்களின் சந்நிதானங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே விரைந்து திருப்பணிகளை நடத்தி, குடமுழுக்கு விழா நடத்த தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.