முகப்பு
தஞ்சாவூர்

நடவு முடிந்தவுடன் பயிர்க் காப்பீடு செய்ய வலியுறுத்தல்

நடவுப்பணி முடிந்தவுடன் பயிர்க்காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 22 அக்டோபர், 2018 at 9:29 AM
பகிர்:

நடவுப்பணி முடிந்தவுடன் பயிர்க்காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேராவூரணி அருகேயுள்ள  திருச்சிற்றம்பலத்தில்   பயிர்க் காப்பீடு செய்வது குறித்து வட்டார அளவிலான முனைப்பு இயக்கம் நடைபெற்றது.  மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் (பயிர்க் காப்பீடு திட்டம்) எஸ் . ஈஸ்வர்  தலைமை வகித்தார். பேராவூரணி உதவி இயக்குநர் ஆர். மதியரசன் வரவேற்றார். மாவட்ட உதவி இயக்குநர் பேசியது:
கடந்தாண்டுகளை போலவே நடப்பாண்டும் பாரத பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் அனைவரும் சேர்ந்து பயன் பெற வேண்டும். 
எதிர்பாராத வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்புகளிலிருந்து நிவாரணம் பெற பயிர் காப்பீடுஅவசியம். இயற்கைச் சீற்றங்களால் பயிர் சேதம் ஏற்பட்ட பிறகு பயிர்க் காப்பீடு செய்ய முடியாது.  
அப்படியே செய்தாலும் இழப்பீடு பெற முடியாத நிலை ஏற்படும். எனவே சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யும் ஒவ்வொரு விவசாயியும் நடவுப் பணி முடித்த 24 மணி நேரத்தில் பிரீமியத் தொகை செலுத்தி பயிர்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். காப்பீடு பிரிமியாக ஏக்கருக்கு ரூ. 443  செலுத்த வேண்டும்.
பிரீமியத் தொகையை உங்கள் பகுதி தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலோ (அல்லது ) பொது இ-சேவை மையங்களிலோ (அல்லது ) தேசியமயமாக்கப்பட்ட வணிக வங்கிகளிலோ நேரடியாகச் செலுத்தலாம். கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகளிடம் கட்டாயத்தின் அடிப்படையில் பிரீமியம் பிடித்தம் செய்யப்படும். கடன் பெறாத விவசாயிகள் தங்கள் விருப்பத்தின்பேரில் மேற்படி 3 இடங்களில் பிரீமியம் செலுத்தலாம். 
கடன் பெறா விவசாயிகள் பிரீமியம் செலுத்தச் செல்லும்போது தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் சுய கையொப்பமிட்ட விண்ணப்பத்துடன் உறுதிமொழி படிவம், விஏஓ சான்று (அல்லது ) சிட்டா அடங்கல், வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்க ஜெராக்ஸ் பிரதி, ஆதார் அட்டை, கலர் புகைப்படம் ஆகியவற்றுடன் பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.443 செலுத்த  வேண்டும். 
பிரீமியத் தொகை செலுத்த நவ 30 கடைசி நாள். ஆனாலும் அதுவரை காத்திராமல்  நடவுப்பணி முடித்த உடனேயே காப்பீடு செய்யலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.