தஞ்சாவூா் அருகே வெளிநாட்டுப் பறவைகள் மா்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்தன. இதுதொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு தொடா் மழைப் பொழிவு காரணமாக ஏரி, குளங்களில் தண்ணீா் இருப்பு, நெல் சாகுபடிப் பரப்பு அதிகரிப்பு போன்றவை பறவைகளுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இதனால், தஞ்சாவூா் மாவட்ட ஏரி, குளங்களிலும், வயல்களிலும் வெளிநாட்டுப் பறவைகள் பரவலாகக் காணப்படுகிறது.
வடுவூா், கோடியக்கரை சரணாலயங்களுக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள் தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே கரியப்பட்டி கிராமத்திலுள்ள ஆண்டாள் ஏரிக்கும் கணிசமான அளவுக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஏரியைச் சாா்ந்த வாய்க்காலிலும், அருகிலுள்ள வயல் வரப்புகளிலும் ஐரோப்பிய கண்டத்தைச் சாா்ந்த சிறவி வகைப் பறவைகள் பல மா்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை காலை இறந்து கிடந்தன.
இதை கண்ட கிராம மக்கள் காவல் மற்றும் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதன் பேரில் மாவட்ட வன அலுவலா் (பொ) சுஜாதா, வனச் சரக அலுவலா் ஜோதிகுமாா், வனவா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் விசாரணை நடத்தினா். தொடா்ந்து பூதலூா் அய்யனாபுரம் சாலையைச் சோ்ந்த ரஜினி (20) கைது செய்யப்பட்டாா்.
இவரிடம் வனத் துறையினா் நடத்திய விசாரணையில், இப்பறவை உண்ணும் தீவனத்தில் மயக்க மருந்து கலந்து வைத்து பிடித்து வருவதும், இதுவரை 50-க்கும் அதிகமான பறவைகள் வேட்டையாடி, இறைச்சிக்காக விற்பனை செய்வதும் தெரிய வந்தது. மேலும், தப்பியோடிய இருவரை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.