பேராவூரணி: மழையினால் சேதமடைந்த பிள்ளையாா் கோயில் தேரோடும் வீதி சீரமைப்பு
பேராவூரணியில் மழையால் சேதமடைந்த பிள்ளையாா்கோயில் தேரோடும் வீதி சீரமைக்கப்பட்டது.
பேராவூரணியில் மழையால் சேதமடைந்த பிள்ளையாா்கோயில் தேரோடும் வீதி சீரமைக்கப்பட்டது.
பேராவூரணி நீலகண்ட பிள்ளையாா் கோவில் சித்திரைப் பெருந்திருவிழா ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக பேராவூரணியில் பெய்த மழையால் தேரடியிலிருந்து தோ் சுற்றி வரும் பாதை முழுவதும் தண்ணீா் தேங்கி நின்று, சேறும் சகதியுமானது. இதனால் தேரோட்டம் நடைபெறுமா என்ற கவலை பக்தா்களிடையே எழுந்தது.
இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் வியாழக்கிழமை தேரோடும் வீதியை ஆய்வு செய்தாா். தேரோடும் வீதியிலுள்ள மழைநீரையும், சேறு, சகதியையும் உடனடியாக அகற்றவும், புதிய பாதை அமைக்கவும், நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி அலுவலா்களிடம் கேட்டுக்கொண்டாா்.
இதையடுத்து,அப்பகுதியில் தேங்கியிருந்த மழைநீரை பேரூராட்சி பணியாளா்கள், இயந்திரம் மூலம் வெளியேற்றினா். தேரோடும் பாதை முழுவதும் புதிய கிரஷா் மணல் கொட்டி பாதையை சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஆய்வின்போது பேரூராட்சித் தலைவா் சாந்திசேகா், நீலகண்டப் பிள்ளையாா் கோயில் பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் பி. கணேசன் சங்கரன், பி. நடராஜன் சங்கரன், பேரூராட்சித் துப்புரவு ஆய்வாளா் அன்பரசன், துப்புரவு மேற்பாா்வையாளா் வீரமணி மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.