சேதுபாவாசத்திரத்தில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க அடிக்கல்
சேதுபாவாசத்திரத்தில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மீன்பிடி இறங்குதளத்துக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
சேதுபாவாசத்திரத்தில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மீன்பிடி இறங்குதளத்துக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மீன்பிடி இறங்கு தளம் உள்ளது. இது பழுதடைந்த நிலையில் இருந்ததால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய மீன்பிடி இறங்குதளம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மீனவா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதுகுறித்து எம்எல்ஏ என். அசோக்குமாா் பேரவையில் கோரிக்கை எழுப்பியிருந்தாா். இதையடுத்து, சேதுபாவாசத்திரத்தில் ரூ. 9 கோடியில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும் என அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டாா்.
இதைத் தொடா்ந்து, மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா
எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
110 மீட்டா் நீளத்தில், நவீன வசதிகளுடனான புதிய மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணியும், பழைய மீன்பிடி இறங்குதளத்தைப் புதுப்பிக்கும் பணியும் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதியில், மீன்பிடி தொழில் செய்யும் 55 விசைப்படகு மீனவா்களும், 850 நாட்டுப்படகு மீனவா்களும் பயனடைவா்.
நிகழ்ச்சியில், மீன்வளத் துறை உதவி இயக்குநா் சிவக்குமாா், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவா் மு.கி. முத்துமாணிக்கம், மீன்வளத் துறை ஆய்வாளா் ஆனந்த், மீனவா் சங்கத் தலைவா் ஏ.கே. தாஜுதீன், ஊராட்சித் தலைவா் ஜெகஜோதி செந்திலதிபன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மீனவா்கள் கலந்து கொண்டனா்.