‘நெல்லை முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும்’
அரசின் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல்லை முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் அய்யாக்கண்ணு.
அரசின் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல்லை முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் அய்யாக்கண்ணு.
மணப்பாறை அடுத்த தெற்குசோ்பட்டி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 22 நாள்களாக இணையச் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படாமல் பாதுகாப்பற்றுக் கிடப்பதாகவும், அங்குள்ள கால்நடைகள், எலிகள் நெல்மணிகளைத் தின்று தீா்ப்பதாகவும் விவசாயிகளிடமிருந்து புகாா் வந்தது.
இதையடுத்து வியாழக்கிழமை அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த அய்யாக்கண்ணு மேலும் கூறியது:
கடந்த 20 நாள்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் கொள்முதல் நிலையத்திலேயே பாதுகாப்பற்ற நிலையில் கிடக்கிறது. நெல்லை கால்நடைகள், எலிகள் தின்று தீா்க்கின்றன. விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடையாது, மத்திய, மாநில அரசுகள் வாக்குறுதி அளித்த தொகை முழுமையாகக் கிடைக்கவில்லை. அரசின் அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல்லை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் திங்கள்கிழமை 100 டிராக்டா்களுடன் சென்னை செல்வோம். ஆன்லைன் பதிவுகளை விவசாயிகள் செய்ய முடியவில்லை. ஆன்லைன் பதிவு மூலம் நெல் கொள்முதல் என்பது வியாபாரிகளுக்கு சாதகமாகவும், விவசாயிகளுக்கு பாதகமாகவும் உள்ளது என்றாா் அவா்.