திருச்சி: திருச்சியிலிருந்து சென்னை, மதுரை, கோவைக்கு, கரூரிலிருந்து ராமேசுவரம் என மேலும் 15 புதிய பேருந்துகளின் (பிஎஸ் 6 ரகம் )இயக்கத்தை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா்.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்துக்கு 90 புதிய பேருந்துகள் வழங்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி ஏற்கெனவே 65 பேருந்துகள் வழங்கப்பட்ட நிலையில், 15 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்.
இந்தப் பேருந்துகள் திருச்சி-சென்னை-மாதவரம், துவாக்குடி-திருச்சி-சென்னை மாதவரம், இளங்காக்குறிச்சி-சென்னை மாதவரம், மணப்பாறை-திருச்சி-கோவை, துவரங்குறிச்சி-திருச்சி-கோவை, துறையூா்-ஈரோடு-கோவை, துறையூா்-திருச்சி-கோவை, உப்பிலியபுரம்-திருச்சி-மதுரை, கரூா்-காணியாளம்பட்டி, கரூா்-ராமேசுவரம், கரூா்-வேலூா், கரூா்- திருமுக்கூடலூா் ஆகிய வழித்தடங்களில் சனிக்கிழமை முதல் சேவையைத் தொடங்கின.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள், திமுக நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் எனப் பலா் கலந்து கொண்டனா்.