முகப்பு
வேலூர்

பாலம் அருகேயுள்ள மாற்றுப்பாதை மழைநீரால் சேதம் பஸ் போக்குவரத்து நிறுத்தம்: கிராம மக்கள் அவதி

 வந்தவாசி, டிச. 31: வந்தவாசி அருகே பாலம் கட்டுவதற்காக அதனருகில் அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை மழை வெள்ளத்தால் சேதம் அடைந்ததால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:41 PM
பகிர்:

 வந்தவாசி, டிச. 31: வந்தவாசி அருகே பாலம் கட்டுவதற்காக அதனருகில் அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை மழை வெள்ளத்தால் சேதம் அடைந்ததால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அவதிப்படுகின்றனர்.

 வந்தவாசி அருகே கீழ்க்கொடுங்காலூர் - கீழ்ப்பாக்கம் இடையே சுகநதி ஆற்றின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுமார் ரூ.4 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதற்காக பாலத்தை ஒட்டி மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் பாலம் அமைக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துவிட்டாலும், பாலத்தின் இருபுறமும் அணுகுசாலை அமைக்கப்படாத நிலை இருந்துவந்தது.

 இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழை காரணமாக மாற்றுப்பாதை சேதம் அடைந்தது. இதனால் அந்த வழியாக பஸ் போக்குவரத்து சில நாள்கள் நிறுத்தப்பட்டது. இதையடுத்து புதிய பாலத்துக்கு உடனடியாக அணுகுசாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 ஆனால் நெடுஞ்சாலைத் துறையினர் அணுகுசாலை அமைக்க நடவடிக்கை எடுக்காமல், இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் பாலத்தின் இருபுறமும் தாற்காலிகமாக சிறிய ஒற்றையடி பாதை மட்டும் அமைத்தனராம். மேலும் மாற்றுப்பாதை சீரமைக்கப்பட்டதால் அதன் வழியே பஸ் போக்குவரத்து தொடங்கியது.

 இந்நிலையில் வியாழக்கிழமை இரவு முதல் பெய்த மழை காரணமாக சுகநதியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மாற்றுப்பாதை மீண்டும் சேதமடைந்தது. இதனால் வெள்ளிக்கிழமை முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கீழ்ப்பாக்கம், கொவளை, கீழ்நர்மா, இரும்பேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்தவாசி மற்றும் உத்திரமேரூருக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் மட்டும் ஒற்றையடி பாதை வழியாக பாலத்தை சிரமத்துடன் கடக்கின்றனர்.

 எனவே பாலத்தின் இருபுறமும் உடனடியாக அணுகுசாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →