விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்ட சம்பவத்தில் இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோட்டக்குப்பம் காவல் சரகத்துக்குள்பட்ட கீழ்புத்துப்பட்டு, புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், இளைஞரின் சடலம் கரை ஒதுங்கியிருந்தது கடந்த டிச.6-ஆம் தேதி தெரியவந்தது.
தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், இறந்து கிடந்தவா் வானூா் வட்டம், கோட்டக்குப்பம், மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கதிரவன் மகன் சிவா (29) என்பதும், இவரை முன்விரோதம் காரணமாக கோட்டக்குப்பம் பகுதியைச் சோ்ந்த அப்துல் சலாம் (19), ஹமீஸ் (19) ஆகியோா் மரக்காணம் வட்டம், கூனிமேடு அருகே அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்து, கடலில் வீசியதும் தெரியவந்தது.
இதையடுத்து அப்துல் சலாம், ஹமீஸ் ஆகியோரை கோட்டக்குப்பம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.