உணவுப் பொருள் உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும்: அமைச்சர் எம்.சி.சம்பத்
தமிழக அரசின் வேளாண் திட்டங்களைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களின் உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும் என மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கேட்டுக் கொண்டார்.
தமிழக அரசின் வேளாண் திட்டங்களைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களின் உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும் என மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கேட்டுக் கொண்டார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின்கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.22.85 லட்சத்தில் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமையில், தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பண்ணை இயந்திரங்களான 11 பவர்வீடர்கள், ஒரு மினி டிராக்டர், 5 சுழல் கலப்பைகள் மற்றும் 2 பவர் டில்லர்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: தமிழக அரசு விவசாயத் துறைக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.22.85 லட்சம் மதிப்பிலான பண்ணை இயந்திரங்களுக்கு அரசு மானியமாக ரூ.20 லட்சம் வழங்கி உள்ளது. விவசாயிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு உணவுப் பொருள்களின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (தோட்டக் கலை) ராஜாமணி, உதவி இயக்குநர் ராமலிங்கம், செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.