முகப்பு
கடலூர்

தண்ணீர் பிரச்னையால் தவிக்கும் சலவைத் தொழிலாளர்கள்

பண்ருட்டியில் உள்ள சலவைத் துறை வளாகத்தில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படி வசதிகள் இல்லாததால் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

Updated On : 5 மார்ச், 2018 at 9:45 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:54 PM

பண்ருட்டியில் உள்ள சலவைத் துறை வளாகத்தில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படி வசதிகள் இல்லாததால் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 
 பண்ருட்டி நகரில் 200-க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள், வீடுகள், விடுதிகள், மருத்துவமனைகளில் இருந்து அழுக்கு துணிகளைப் பெற்று சலவை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களது வசதிக்காக கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் பண்ருட்டி நகர நிர்வாகம் சார்பில் கெடிலம் நதியின் ஓரத்தில் 
சலவைத் துறை வளாகம் அமைக்கப்பட்டது. இங்கு, தண்ணீர் தொட்டியுடன் கூடிய சலவைக் கற்கள், துணிகளை பாதுகாக்கும் அறை, ஆழ்குழாய் கிணறு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டன.
 சலவைத் துறைக்கான மின் கட்டணத்தை நகர நிர்வாகமே செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், பல்வேறு காரணங்களால் மின் கட்டணம், பராமரிப்புச் செலவுகளை சலவைத் தொழிலாளர்களே தங்களது சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டுமென நகர நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது.
 இந்த நிலையில், சலவைத் துறை வளாகத்தில் பல்வேறு வசதி குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இங்குள்ள ஆழ்குழாய் கிணறு கடந்த பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது. துணிகளை பாதுகாத்து வைக்கும் அறை சிதிலமடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. 
தற்போது, தொழிலாளர்கள் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் குழாயில் இருந்து சலவைத் துறைக்கு தண்ணீர் எடுத்து துணிகளை சலவை செய்கின்றனர். உரிய தண்ணீர் வசதி இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர். 
 இதுகுறித்து சலவைத் தொழிலாளர்கள் கூறியதாவது: 
சலவைத் துறைக்கான ஆழ்குழாய் கிணறு பழுதடைந்ததால் 4 ஆண்டுகளாக  தண்ணீர் வசதி இல்லை. இதனால், வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் குழாயில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகிறோம். அதிலும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே தண்ணீர் வரும். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தொழிலாளர்களுக்கு இடையே சலவை செய்வதில் அடிக்கடி தகராறு, மனக் கசப்பு ஏற்படுகிறது. துணிகளை பாதுகாப்பாக வைப்பதற்கும் அறை இல்லை. இதனால், கரும காரிய கொட்டகையில் உள்ள சிறு அறையைப் பயன்படுத்தி வருகிறோம். மேலும், இந்தப் பகுதி அருகே குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் தொடர்ந்து எரிக்கப்படுவதால் புகை, காற்று மாசு காரணமாக எங்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது.
 புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க சுமார் ரூ.2 லட்சம் வரை செலவாகும் எனக் கூறுகின்றனர்.  எனவே,  மாவட்ட மற்றும் நகர நிர்வாகம் சலவைத் தொழிலாளர்களின் நிலையை உணர்ந்து, சலவைத் துறை வளாகத்தில் தண்ணீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.