நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்
கடலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவை அறிந்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவை அறிந்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார்.
மாவட்டத்தில் குறுவைப் பருவத்தில் அறுவடையாகும் நெல்லினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்திட ஏதுவாக 41 நெரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஜூலை மாதம் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்முதல் செய்து வந்தன. இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் ஆகஸ்ட் மாதத்துடன் கொள்முதலை நிறுத்திக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாவட்டத்திலுள்ள கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக உழவர்மன்ற கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் கார்மாங்குடி எஸ்.வெங்கடேசன் கூறியதாவது: காட்டுன்னார்கோவில், சிதம்பரம் வட்டங்களில் விவசாயிகள் நெல் அறுவடையை தொடக்கி உள்ளனர். மேலும் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்துள்ளதால், கொள்முதல் நிலையங்களுக்கு வந்த விவசாயிகளின் நெல் முழுவதும் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. இதை ஏற்க முடியாது. எனவே, தமிழக அரசு தலையிட்டு விளைந்துள்ள நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறுகையில், மாவட்டத்திலுள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் விவசாயிகளின் தேவை அறிந்து மீண்டும் திறந்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வழக்கம்போல நெல்லினை அங்கு வழங்கலாம் என்றார்.