சிதம்பரத்தில் தெருவடைச்சான் உற்சவம்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவில், தெருவடைச்சான் சப்பர உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவில், தெருவடைச்சான் சப்பர உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 22-ஆம் தேதி சந்திர பிரபை வாகனத்திலும், 23-ஆம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்திலும், 24-ஆம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவில், வெள்ளிக்கிழமை இரவு தெருவடைச்சான் சப்பர உற்சவம் நடைபெற்றது. முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் திராட்சை உள்ளிட்ட உலா் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூா்த்திகள் வீதி உலா வந்தனா். திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வருகிற 29-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தோ்த் திருவிழாவும், 30-ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகின்றன.