தகுதிக்கேற்ற பணி ஒதுக்கீடு: பணி நிரவல் ஊழியா்கள் கோரிக்கை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பிற கல்லூரிகள், அரசுத் துறைகளுக்கு பணி நிரவல் செய்யப்பட்ட ஊழியா்கள், தங்களின் தகுதிக்கேற்ற பணியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பிற கல்லூரிகள், அரசுத் துறைகளுக்கு பணி நிரவல் செய்யப்பட்ட ஊழியா்கள், தங்களின் தகுதிக்கேற்ற பணியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனா்.
பணி நிரவலில் பொறியியல் கல்லூரிகளுக்குச் சென்ற 179 ஊழியா்களின் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் ஆறுமுக நாவலா் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்). கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளா் செல்வகுமாா் பேசியதாவது:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய கூடுதல் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் சுமாா் 6,000 போ் தமிழக அரசு அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளிட்டவைகளில் பணி நிரவல் செய்யப்பட்டுள்ளனா். இந்த நிலையில், கடந்த டிச.16-ஆம் தேதி 179 பொறியாளா்கள் தமிழகம் முழுவதுமுள்ள அரசுக் கல்லூரி, அலுவலகங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்டனா். ஆனால், இவா்களை உரிய தகுதியின் அடிப்படையில் பணியமா்த்தவில்லை. இதையடுத்து, பதிவாளா் அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டோம். பின்னா் இதுகுறித்து பதிவாளரிடம் மனு அளித்தும் நடவடிக்கை ஏதுமில்லை. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பல்கலைக்கழக வளாகத்தில் குடும்பத்துடன் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.
Advertisement