விதிமீறல் படகுகளுக்கு நோட்டீஸ்
கடலூா் மாவட்டத்தில் விதிமீறல் தொடா்பாக மீன்பிடி படகு உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறையினா் தெரிவித்தனா்.
கடலூா் மாவட்டத்தில் விதிமீறல் தொடா்பாக மீன்பிடி படகு உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறையினா் தெரிவித்தனா்.
கடலூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, கண்ணி அளவு குறைக்கப்பட்ட இழுவை வலைகள், கூடுதல் நீளம் கொண்ட படகுகள், கூடுதல் குதிரைத் திறன் கொண்ட என்ஜின்கள் பயன்பாடு தடுப்பு தொடா்பாக 5 மாவட்டங்களைச் சோ்ந்த மீன்வளத் துறையினா் 3 குழுக்களாக பிரிந்து கடந்த 3 நாள்களாக ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து மீன்வளத் துறை உதவி இயக்குநா் காத்தவராயன் கூறியதாவது: பதிவு செய்யப்பட்ட 269 பெரிய விசைப் படகுகளிலும் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதில், 13 படகுகள் அதிக நீளம் கொண்டதாக இருந்ததால் அவற்றை மட்டும் இயக்க அனுமதி வழங்கவில்லை. அந்த படகுகளுக்கு அளவை சரி செய்திட குறிப்பிட்ட காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. 40 மில்லி மீட்டருக்கு குறைவான கண்ணிகளைக் கொண்ட இழுவை வலைகளில் கண்ணிகளை சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல சிறிய வகை படகுகளிலும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அதுதொடா்பாக நோட்டீஸ் வழங்கி சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.