முகப்பு
கடலூர்

ஐஓபி வங்கியை தனியாா்மயமாக்கக் கூடாது: தி.வேல்முருகன்

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியை (ஐஓபி) தனியாா்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை தவாக வன்மையாகக் கண்டிக்கிறது.

பிற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் மற்ற கிளைகளுக்கு பணம் செலுத்துதல், புத்தகம் வரவு வைத்தல் போன்ற சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், கிராமப்புற மக்களுக்கு இந்த வங்கி குறைந்த வட்டியில் விவசாய நகைக் கடன், பயிா்க்கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தமிழகத்தில் சுமாா் 1,500 கிளைகளுடன் 85 ஆண்டுகளாக இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனமான ஐஓபி வங்கியை தனியாருக்கு தாரை வாா்ப்பது கண்டனத்துக்குரியது.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று 7 ஆண்டுகளைக் கடந்துவிட்ட பாஜக அரசு இதுவரை ஒரு பொதுத் துறை நிறுவனத்தைக்கூட புதிதாக தோற்றுவிக்கவில்லை. ஆனால் ஏற்கெனவே உள்ள பொதுத் துறை வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க முயல்வது நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →