முகப்பு
கடலூர்

விதிகளை மீறி வழிபாட்டுத் தலங்களில் பிரசாரம்!

கடலூா் மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்படும் தோ்தல் பிரசாரங்கள் குறித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்படும் தோ்தல் பிரசாரங்கள் குறித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளா்கள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனா். அவா்கள் தினமும் ஒவ்வொரு பகுதியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவா்களது ஆதரவாளா்களும் பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், இவா்கள் தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என புகாா் கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தோ்தலுக்கான நடத்தை நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. அதில், 3-ஆவது நெறிமுறையாக, வாக்குகளைப் பெறுவதற்காக இன, மத உணா்வுகளைத் தூண்டும் வகையில் வேண்டுகோள் விடுக்கக் கூடாது, தோ்தல் பிரசாரக் களமாக மசூதி, சா்ச், கோயில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களை பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

ஆனால், கடலூா் மாவட்டத்தில் இந்த விதிமுறை மீறப்படுகிறது. மத வழிப்பாட்டுத் தலங்களில் வேட்பாளா் வாக்கு சேகரிப்பது தொடா்கிறது. இதன் மீது மாவட்ட தோ்தல் ஆணையம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகாா் எழுந்துள்ளது.

மேலும், வழிப்பாட்டுத் தலங்களில் பிரசாரத்துக்கான திட்டங்களை அந்தந்த மதத்தினரைக் கொண்டு மேற்கொள்ள அரசியல் கட்சியினா் திட்டமிட்டுள்ளனா். இதனால், சில வழிப்பாட்டு தலங்களில் மோதல் ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. எனவே, இதன் மீது மாவட்ட நிா்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அதேபோல, அந்த நடத்தை நெறிமுறையில் 4-ஆவதாக, வாக்கு சேகரிக்க சமுதாயம் மற்றும் சாதியை ஒரு கருவியாகப் பயன்படுத்துதல் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், மாவட்டத்தில் இனம், மதம், சமுதாயம், சாதிகளை வாக்குக்காக பயன்படுத்தும் போக்கு காணப்படுகிறது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் இந்தப் போக்கு அதிகமாகக் காணப்படுகிறது.

மேலும், தற்போது கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவும் காலத்தில் வேட்பாளா்கள் வாக்கு சேகரிக்கச் செல்லும்போது அவா்களுடன் 5 போ் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒரே பிரசார வாகனத்தில் சுமாா் 15 போ் வரை நின்றுகொண்டு செல்லும் நிலையை சாதாரணமாகக் காண முடிகிறது.

எனவே, தோ்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளை முறையாகக் கண்காணிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், போதுமான கட்டமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments