முகப்பு
கடலூர்

நாட்டின் ஜனநாயகம் தவறானவர்களின் கையில் உள்ளது: கே.எஸ்.அழகிரி

இந்த நாட்டின் ஜனநாயகம் தவறானவர்களின் கையில் உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

Updated On : 5 அக்டோபர், 2021 at 7:47 PM
நாட்டின் ஜனநாயகம் தவறானவர்களின் கையில் உள்ளது: கே.எஸ்.அழகிரி
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:48 AM

இந்த நாட்டின் ஜனநாயகம் தவறானவர்களின் கையில் உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சிதம்பரம் அருகே புவனகிரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  “பஞ்சாப்பில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்றதோ, அதைவிட கொடுமையான சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. உள்துறை இணை அமைச்சர் அஜய்மிஸ்ரா, அவரது மகன் போராடுகிற விவசாயிகள் மீது கார் மோதியதில் அந்த இடத்திலேயே 4 விவசாயிகள் இறந்துள்ளனர். அதனால் ஏற்பட்ட சம்பவத்தில் மேலும் 4 விவசாயிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். மொத்தம் 9 பேர் இறந்துள்ளார்கள்.

ஜாலியன் வாலாபாக் கூட படுகொலை நடந்த பிறகு அந்த இடத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் செல்வதற்கு ஆங்கிலேயே அரசு அனுமதியளித்தது. ஆனால் இன்றையக்கு பாஜக அரசு உத்திரப்பிரதேசத்திலே பிரியங்கா காந்தி சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவும், இறந்து போனவர்களின் குடும்பத்தினரை விசாரிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தைவிட பாஜக அரசின் ஏகாதிபத்தியம் கடுமையானதா? இதற்காக காங்கிரஸ் கட்சி கடுமையாக போராடுகிறது.

பிரியங்கா காந்தி விவசாயிகளை சந்திக்காமல், இறந்து போனவர்களின் குடும்பத்தினரை ஆறுதல் தெரிவிக்காமல் நான் தில்லி திரும்ப மாட்டேன் என போராட்டம் நடத்தி வருகிறார். அவரை சந்திப்பதற்காக வந்த சத்தீஸ்கர் முதல்வர் பாகலின் விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை.

அதன் பிறகு தரையிறங்கிய விமானத்தில் இறங்கி, விமான நிலையத்திலிருந்து வெளியே வர அரசு அனுமதிக்கவில்லை. ஒரு முதல்வர் சுதந்திரநாட்டில் விமான நிலையத்திலிருந்து வெளியே சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க முடியவில்லை. அவர் விமான நிலையத்திலேயே போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நாட்டின் ஜனநாயகம் தவறானவர்களின் கையிலிருந்து பாடுபடுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இல்லை.

எனவே இந்தியா முழுவதும் தேசிய தொண்டர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கூட நரேந்திரமோடியின் உண்மையான  முகத்தை தெரிந்து கொண்டுள்ளனர். ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதை தவிர நமக்கு வேறு நோக்கம் கிடையாது. ஆங்கிலேயர்களையே எதிர்த்தவர்கள் நாம். ஆங்கிலேயர்களையே தோற்கடித்து வெற்றி பெற்றவர்கள் நாம். எனவே நரேந்திர மோடியையும் வெற்றி பெறுவோம் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்து கோஷங்களை எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில்  மாநில துணைத் தலைவர் கே.ஐ.மணிரத்தினம், மாநில பொதுச்செயலாளர் சேரன், மாநில செயலாளர் பி.பி.கே.சித்தார்த்தன், மாவட்டத் தலைவர் என்.வி.செந்தில்நாதன், முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், புவனகிரி நகரத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.