சிதம்பரம் அருகே இடி, மின்னல் தாக்கி 2 பேர் பலி
சிதம்பரம் அருகே வெவ்வேறு இடங்களில் இடிமின்னல் தாக்கி இருவர் பலியானார்கள்.
சிதம்பரம் அருகே வெவ்வேறு இடங்களில் இடிமின்னல் தாக்கி இருவர் பலியானார்கள்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் வியாழக்கிழமை மாலை இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பிரசன்ன ராமாபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லதுரை மகன் கலைச்செல்வன் (30) தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இடிமின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மருதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோன்று சிதம்பரம் அருகே முகையூர் அருகன்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலதண்டாயுதம் (55) என்பவர் வயலில் இரும்புக்கூடையை வைத்து கொண்டு விதை நெல் தெளித்து கொண்டிருந்த போது அவர் மீதும் இடிமின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.