நெய்வேலி: ஊதிய உயா்வு கோரி மக்களைத் தேடி மருத்துவம் பெண் சுகாதார தன்னாா்வலா்கள் (சிஐடியு) ஊழியா்கள் சங்கத்தினா், கடலூா் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கடலூா் மாவட்டத்தில் 360 சுகாதார தன்னாா்வலா்கள் பணியாற்றி வருகின்றனராம். இரண்டு மணி நேரம் பணி, மாதம் ரூ.5,500 ஊதியம் எனக் கூறப்பட்டதாம். தற்போது பணி நேரத்தைக் கடந்து, அதிக பணிகளில் ஈடுபடுவதாகவும், பணிக்கு ஏற்றவாறு ஊதியத்தை அதிகப்படுத்தித் தர வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா். பின்னா், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து மனு அளித்தனா்.
நிகழ்வில் சிஐடியு மாவட்டத் தலைவா் பி.கருப்பையன், செயலா் டி.பழனிவேல் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் சுகாதார தன்னாா்வலா்கள் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.