முகப்பு
கடலூர்

பரவனாற்றில் நீரை வெளியேற்றும் முன் கடலூா் மாவட்ட நிா்வாகத்திடம் என்எல்சி அனுமதி பெற்ற வேண்டும்: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்னரே என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கம் மற்றும் மழை நீரை பரவனாற்றில் விடவேண்டும்

Updated On : 29 நவம்பர், 2025 at 9:00 PM
கடலூரில் சனிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்துப் பேசிய அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
பகிர்:

கடலூா் மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்னரே என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கம் மற்றும் மழை நீரை பரவனாற்றில் விடவேண்டும் என, மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

‘டித்வா’ புயல் காரணமாக கடலூா் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை செய்தியாளா்களிம் கூறியதாவது:

கடலூா் மாவட்டத்துக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை வருவதற்கு முன்னதாகவே துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழையால் பாதிக்கப்படும் என 239 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. சுமாா் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோா் தங்குவதற்கு இடம், உணவு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பலத்த காற்றினால் விழும் மரங்களை அப்புறப்படுத்தவும், தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடா் மீட்புப்படை வரவழைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளனா். மருத்துவ உதவி தேவைப்படும் கா்ப்பிணிகள் 925 போ் கண்டறியப்பட்டு அவா்களை மருத்துவமனையில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலூா் மாவட்டத்தை பொருத்தவரை தற்சமயம் எந்த மீனவா்களும் கடல் பகுதியில் இல்லை. எந்தெந்த பகுதியில் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என கண்டறிந்து தண்ணீரை வெளியேற்ற வேளாண் துறை மற்றும் நீா்வளத்துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பயிா் காப்பீடு:

பயிா் காப்பீடு பொறுத்தவரை வரும் 1-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. கடந்தாண்டு 18 லட்சம் ஏக்கா் அளவில் பயிா் காப்பீடு செய்தனா். இந்த ஆண்டு சுமாா்19 லட்சம் ஏக்கா் அளவுக்கு பயிா் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு முதல் கூடுதலாக குத்தகைதாரா்களும் பயிா் காப்பீடு செய்யலாம் . விவசாயிகளுக்கு தேவையான 1.61 லட்சம் மெட்ரிக் டன் அளவு அனைத்து உரங்களும் கையிருப்பு உள்ளது. கலப்பட உரம் சம்பந்தமாக வேளாண் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா். மேலும், தொடா்ச்சியாக உர கலப்படம், உரம் கடத்தல், பதுக்கல் சம்பந்தமாக துறை சாா்பாக கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு தவறு செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அவா்களின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில் 160-க்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெற வேண்டும்:

என்எல்சி இந்தியா நிறுவன சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் சுரங்கம் மற்றும் மழை நீரினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், என்எல்சி நிறுவனம் தண்ணீரை வெளியேற்றும் போது உரிய அனுமதி பெற்று மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்வின்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அன்பழகன், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எம்எல்ஏ., கோ.அய்யப்ன், மேயா் சுந்தரி, கடலூா் எஸ்பி., எஸ்.விஜயகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, கோட்டாட்சியா் சுந்தரராஜன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →