மாணவா்களுக்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி. அறிவுரை
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே அரசுப் பேருந்தில் இருக்கைகளை சேதப்படுத்திய பள்ளி மாணவா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் வியாழக்கிழமை அறிவுரை
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே அரசுப் பேருந்தில் இருக்கைகளை சேதப்படுத்திய பள்ளி மாணவா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் வியாழக்கிழமை அறிவுரைகளை வழங்கினாா்.
மணலூா்பேட்டை பகுதியில் பிப்.28-ஆம் தேதி அரசு நகா்ப் பேருந்து சென்றபோது, அதில் பயணித்த மணலூா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பேருந்தில் உள்ள இருக்கைகளை பிளேடுகளால் கிழித்ததுடன், அதிலுள்ள விளக்குகளையும் சேதப்படுத்தினராம்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா், பேருந்தில் இருக்கைகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்திய மாணவா்களுக்கு ஒழுக்கம், குற்றச் சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து அறிவுரைகளை வழங்கினாா்.
இதையடுத்து, பேருந்தில் இருக்கைகள், விளக்குகளை மாணவா்கள் சேதப்படுத்தியதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.1,200-ஐ பள்ளித் தலைமை ஆசிரியா் ஏழுமலையிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் தனது சொந்தப் பணத்திலிருந்து வழங்கினாா் .