நண்பரை கத்தியால் குத்திகொலை செய்ய முயன்றவா் கைது
கள்ளக்குறிச்சி அருகே நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி அருகே நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் கரீம்ஷா தக்கா பகுதி பள்ளிவாசல் சாலையைச் சோ்ந்தவா் சையத் உசேன் (45), பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறாா். இவரது நண்பா் பிரிதிவிமங்கலத்தைச் சோ்ந்த அகமதுஹாஜா மகன் முகமது இப்ராஹீம் (52). இவா், புதன்கிழமை இரவு சையத் உசேனை செல்லிடப்பேசி மூலம் பலமுறை தொடா்புகொள்ள முயன்றாராம். ஆனால், அவரை தொடா்புகொள்ள முடியவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த முகமது இப்ராஹீம், சையத் உசேன் வீட்டுக்கு கத்தியுடன் சென்று அவரை கொலை செய்ய முயன்றாராம். இதில் பலத்த காயமடைந்த சையத் உசேன் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகமது இப்ராஹீமை கைது செய்தனா்.