புதுச்சேரியில் கூடுதல் குப்பைத் தொட்டிகள் தேவை: அதிமுக எம்.எல்.ஏ வலியுறுத்தல்
புதுச்சேரி நகராட்சிப் பகுதியில் கூடுதலாக குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் என்று முத்தியால்பேட்டை அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தினார்.
புதுச்சேரி நகராட்சிப் பகுதியில் கூடுதலாக குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் என்று முத்தியால்பேட்டை அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தினார்.
புதுச்சேரி நகராட்சி மற்றும் கள விளம்பர அலுவலகம் சார்பில், தூய்மை இந்தியா நகர கணக்கெடுப்பு சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. முத்தியால்பேட்டை வ.உ.சி. நகர் அன்னிபெசன்ட் வீதி பூங்காவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த முகாமை வையாபுரிமணிகண்டன்
எம்.எல்.ஏ. தொடக்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியாதவது: தூய்மை இந்தியா திட்டத்தில் அதிகாரிகளோடு நாமும் ஒத்துழைப்பு அளித்தால்தான் சுத்தமான, சுகாதாரமான வாழ்க்கை வாழ முடியும். கடந்த ஆண்டு திருச்சி தூய்மை நகராக தேர்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டு புதுச்சேரி தூய்மையான நகராக தேர்வு செய்யப்பட்டு முதலிடம் பெற வேண்டும். ஆனால், புதுச்சேரியில் பல இடங்களில் குப்பைத் தொட்டிகள் இல்லை. அவை முழுமையாக பராமரிக்கப்படுவதில்லை. குப்பைகளை அகற்றும் தனியார் நிறுவனம், மூதாட்டிகளை வேலைக்கு வைத்துள்ளது. அவர்களால் குப்பை டப்பாக்களைக்கூட தூக்க முடியவில்லை. கூடுதல் இடங்களில் குப்பைத்தொட்டிகளை வைத்து தேவையான தொழிலாளர்களை பணியில் அமர்த்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விழாவில் கள விளம்பர அலுவலக உதவி இயக்குநர் சிவக்குமார், நகராட்சி உதவிப் பொறியாளர் விஜயகுமார், தாகூர் கலைக் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். முகாமைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள், நேரு இளையோர் மைய இளைஞர்கள் பங்கேற்ற தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.