உலகப் புகழ்பெற்ற மகாமகம் குளத்தில் கழிவு நீர் கலப்பு: பக்தர்கள் அதிர்ச்சி!
உலகப் புகழ்பெற்ற மகாமகம் குளத்தில் கழிவு நீர் கலப்பது குறித்து விடியோ வைரல் குறித்து...
உலகப் புகழ்பெற்ற மகாமகம் குளத்தில் கழிவு நீர் கலப்பதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த பரபரப்பு நிலவி வருகிறது.
தென்னக கும்பமேளா என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமக குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகப் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு மகாமக குளத்தில் புனித நீராடுவார்கள்.
இந்த குளத்தை சுற்றிலும் 16 மண்டபங்களும், 21 தீர்த்த கிணறுகளும் உள்ளன. அதனால் காசிக்கு நிகரான புண்ணியம் கொடுக்கக்கூடிய தீர்த்தகுளமாக இந்த குளம் விளங்குகிறது. குளத்தில் நீராடினால் தேவ தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.
Advertisement
Advertisement
அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மாசிமகம் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டு மாசி மாத திருவிழா கடந்த இரண்டாம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
அதேபோல் ஆடி அமாவாசை, மகாலய அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட நாள்களில் முன்னோர்களுக்கு இந்த குளத்தில் தர்பணம் கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம்
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த குளம், அறநிலையத்துறை, நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 15) மகாமக குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் இருந்து கடும் துர்நாற்றத்துடன் கூடிய கருப்பு நிறத்தில் கழிவு நீர் வந்துள்ளது. இதனால் குளத்தைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசி உள்ளது.
குளத்தில் கழிவு நீர் கலப்பதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டடனர்.
சமூக வலைதளங்களில் வைரலான அந்த விடியோவை பார்த்து மக்கள் மற்றும் இந்து அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பலர் மகாமக குளத்தில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், புனித குளத்தில் இறங்கி கை கால்கள் கழுவி நீரை தலையில் தெளிக்கும் பொழுது துர்நாற்றம் வீசுவதை கண்டு வெளியூர் பக்தர்கள் முகம் சுழித்து செல்வதையும் பார்க்க முடிந்தது.
இதையடுத்து அங்கு வந்த அறநிலையத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களைக் கொண்டு குளத்தில் கழிவு நீருடன் வந்து தேங்கியிருந்த கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மிகப்பெரிய புனித குளமாக போற்றப்படும் கும்பகோணம் மகாமக குளத்தில் கழிவு நீர் கலக்கும் வகையில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டினர். உடனடியாக இந்த நீரை முழுவதுமாக அப்புறப்படுத்தி புதிய நீர் நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
kumbakonam magamagam pond sewage contamination mixing issue... Devotees shocked!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.