மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: வருவாய் உச்சவரம்பை உயர்த்தக் கோரிக்கை
புதுவை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் ஆண்டு வருவாய் உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று
புதுவை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் ஆண்டு வருவாய் உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் இரா.முருகானந்தம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவை நிதிநிலை அறிக்கையில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ரூ.1.5 லட்சம் வருமானம் உள்ள ஏழை மக்களுக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது.
அதேநேரத்தில் வருமான உச்சவரம்பை ரூ.5 லட்சம் என உயர்த்த வேண்டும். இத்திட்டத்தை காலவரம்பு நிர்ணயித்து ஒரு மாத காலத்தில் நிறைவேற்ற வேண்டும்.
அதுபோல, புதுவையில் வரியில்லா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளதையும் இயக்கம் வரவேற்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டு வரை அரசாணை, அமைச்சரவை முடிவு என உள்ளிட்ட எந்த வகையிலும் வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தக்கூடாது.
மேலும், கடந்த ஆண்டும் வரியில்லா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட அனைத்து வரி உயர்வுகளையும், கட்டண உயர்வுகளையும் திரும்பப் பெற வேண்டும். எதிர்காலத்தில் வரியும், கட்டணமும் உயர்த்த அரசு நினைத்தால் அதை நிதிநிலை அறிக்கையில் தெரிவித்து, சட்டப்பேரவையில் விவாதித்து உயர்த்த வேண்டும்.
ஏழைகள் பயன் பெறும் வகையில் 2009-இல் கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் இதுவரை அமல்படுத்தவில்லை. இதற்காக குழு அமைத்து கட்டண நிர்ணயம் செய்தாலும், அதை கண்காணிக்க குழு அமைக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான பள்ளிகள் குழு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கவில்லை.
மேலும், பல தனியார் பள்ளிகள் மாநில அரசின் கட்டண நிர்ணயக் குழுவில் இருந்து தப்பிக்க அதே ஆசிரியர்களைக் கொண்டு மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகக் கூறி, மாநில அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்காமல் கூடுதலாக வசூலித்து வருகின்றன. எனவே, சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை பின்பற்றும் பள்ளியும் மாநில அரசின் கட்டணக் குழுவின் கீழ்தான் வருகிறது என்ற சட்ட விதிமுறையை கொண்டு வர வேண்டும்.
புதுவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்களது பணி நேரத்திலும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் இல்லை. அரசு பொது மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதியில்லை.
அரசு மருத்துவக் கல்லூரியில் மூடப்பட்ட டயாலிஸிஸ் யூனிட் இதுவரை திறக்கப்படவில்லை. இதை உடனடியாக திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் முருகானந்தம்.