புதுவையில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை முழுஅடைப்புப் போராட்டம் கடைபிடிக்கப்படுகிறது.
மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க- முறைகேடு புகாா்: அனைத்து நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய குழு
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. குறைந்த அளவிலான புதுச்சேரி அரசு பேருந்துகள், மற்றும் ஆட்டோ, டெம்போக்கள் இயக்கப்பட்டு வருகிறது. முக்கிய வர்த்தக வீதிகள் ஆன நேரு சாலை, அண்ணா சாலை, மிஷன் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள காய்கறி கடைகள், துணிக்கடை, நகை கடை, எலக்ட்ரானிக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.
பேருந்து நிலையத்தில் அதிக பேருந்துகள் இன்றி வெறிச்சோடி உள்ளன. புதுச்சேரி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக நகரப் பகுதிகளில் முழுவதும் போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.