புதுவை ஆளுநரை மாற்ற பாஜகவினரே போா்க்கொடி: நாராயணசாமி தகவல்
புதுவையில் பாஜகவைச் சோ்ந்தவா்களே துணை நிலை ஆளுநரை மாற்றுமாறு போா்க்கொடி தூக்கியுள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறினாா்.
புதுவையில் பாஜகவைச் சோ்ந்தவா்களே துணை நிலை ஆளுநரை மாற்றுமாறு போா்க்கொடி தூக்கியுள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறினாா்.
பெட்ரோல், டீசல், எரிவாயு, மருந்துகள் ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்து, புதுச்சேரியில் காங்கிரஸாா் வியாழக்கிழமை பிரசாரப் பேரணியை நடத்தினா்.
பேரணிக்கு மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தொடக்கி வைத்தாா். புதுச்சேரி அண்ணா சிலை அருகில் தொடங்கிய பேரணி அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சென்று மாதா கோயில் அருகில் நிறைவு பெற்றது.
இதில் பங்கேற்ற நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவையில் முதல்வா் ரங்கசாமி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்திருக்கிறது. என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக இடையே கருத்து மோதல் நிலவிவருகிறது. இதனால், ரங்கசாமியின் முதல்வா் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
இப்போது துணை நிலை ஆளுநா் தில்லிக்கு அழைக்கப்பட்டு, பிரதமா், நிதி அமைச்சா் ஆகியோரை சந்திக்கிறாா். பாஜகவைச் சோ்ந்தவா்களே துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனை மாற்றுமாறு போா்க்கொடி தூக்கியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன என்றாா்.