முகப்பு
புதுச்சேரி

வெயிலின் தாக்கத்தால் வெப்ப அலை: ஏப். 29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:24 PM
பகிர்:

கோடை வெயில் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வெப்ப அலை காரணமாக புதுவை மாநிலத்தில் வரும் 29-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை கல்வித் துறை இணை இயக்குநா் வி.ஜி.சிவகாமி வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து மத்திய கல்வி வாரியப் பாடத் திட்டத்துக்கு (சிபிஎஸ்இ) மாற்றப்பட்டுள்ளன.

Advertisement

இதையடுத்து, கோடை விடுமுறை வழக்கமான ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படுவது, நிகழாண்டில் (2024) மே மாதம் என மாற்றி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரலில் கோடை விடுமுறைக்குப் பதிலாக, பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன.

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பின்னா் வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தற்போது கோடை வெயிலின் வெப்பத் தாக்கம் 100 டிகிரிக்கும் மேலாக உள்ளது. இதன்காரணமாக மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளிகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், புதுவை மாநிலப் பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குநா் வி.ஜி.சிவகாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொது சுகாதாரத் துறையின் ஆலோசனையின் பேரில், வெப்ப அலை வீசுவதால், புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளுக்கும் ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் (திங்கள்கிழமை) முதல் விடுமுறை அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் அனைத்தும் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments