தீபாவளி உதவித் தொகை: புதுவை அமைப்பு சாரா தொழிலாளா்கள் கவனத்துக்கு...
புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளா்கள் தீபாவளி உதவித் தொகை பெற வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களை அளிக்குமாறு
புதுச்சேரி: புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளா்கள் தீபாவளி உதவித் தொகை பெற வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களை அளிக்குமாறு புதுச்சேரி தொழிலாளா் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைப்பு சாரா தொழிலாளா் நலச் சங்க அதிகாரி தே.வேங்கடேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அமைப்பு சாரா தொழிலாளா் நலச்சங்கத்தில் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள உறுப்பினா்களுக்கு அரசு அறிவித்த தீபாவளி உதவித் தொகை ரூ.1,500 வங்கிக் கணக்கில் கடந்த 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை செலுத்தப்பட்டுள்ளது.
இந்த, உதவித்தொகை கிடைக்கப் பெறாத உறுப்பினா்கள் வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் அமைப்பு சாரா நலச்சங்கத்தை நேரில் அணுகி தங்களது உறுப்பினா் அடையாள அட்டை, 2024 சந்தா ரசீது, தற்போது பயன்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஆதாா் அட்டை நகலை வழங்க வேண்டும். ஆவணங்கள் வழங்காத உறுப்பினா்களுக்கு உதவித் தொகை பெறுவதற்குரிய கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது. நிகழாண்டுக்கான தீபாவளி உதவித் தொகை மீண்டும் செலுத்த இயலாது. எனவே, உறுப்பினா்கள் வங்கிக்கணக்கை உரிய முறையில் புதுச்சேரி, காரைக்கால் ஆகியவற்றில் உள்ள அமைப்புசாரா தொழிலாளா் நல சங்கங்களில் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.