பைக் மீது லாரி மோதல்: பெண் சாவு
கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை பைக் மீது லாரி மோதியதில் கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை பைக் மீது லாரி மோதியதில் கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி முத்துலட்சுமி (37). இவர்கள் இருவரும் கச்சிராயப்பாளையத்தில் நடைபெற்ற வாரச் சந்தையில் காய்கனி வாங்குவதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
கச்சிராயப்பாளையம் - அம்மாபேட்டை சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்றபோது, கரடிசித்தூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, பைக் மீது மோதியதாகத் தெரிகிறது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முத்துலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சேகர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார் .
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கச்சிராயப்பாளையம் போலீஸார், முத்துலட்சுமியின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.