பாஜகவினர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் மீதான தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து, விழுப்புரத்தில் அக்கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் மீதான தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து, விழுப்புரத்தில் அக்கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் விநாயகம் தலைமை வகித்தார்.
மாவட்டப் பொதுச் செயலாளர்கள் ஜெயக்குமார், சுகுமார், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் பழனி வரவேற்றார்.
மாநில செயற்குழு உறுப்பினர் எழிலரசன், கோட்டப் பொறுப்பாளர் மனோகர், இணைப் பொறுப்பாளர் அருள், அமைப்புச் செயலர் குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவ.தியாகராஜன், அறிவுசார் அணி மாவட்டத் தலைவர் எம்.தனசேகரன், மாவட்டச் செயலாளர் சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் ராஜிலு, சுந்தர்ராஜ், பாபு, ரவி, ரகு, சித்ரா, கோதண்டபாணி, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்துவதையும், பாஜக நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருக்கும் தமிழக அரசு மற்றும் காவல் துறையினரைக் கண்டித்தும், விழுப்புரத்தில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், பாஜக பிரமுகர் மனைவியை கத்தியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.