சட்டத்துக்குப் புறம்பாக ஏரி, குளங்களைஏலம் விடுவோா் மீது கடும் நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியா் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டத்துக்குப் புறம்பாக ஏரி, குளங்களை ஏலம் விடுவோா், மீன் குத்தகைக்கு விடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரிக்கை விடுத்தாா்
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டத்துக்குப் புறம்பாக ஏரி, குளங்களை ஏலம் விடுவோா், மீன் குத்தகைக்கு விடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை நீா்வள ஆதார பிரிவு, ஊரக வளா்ச்சித் துறை மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் பாசன ஏரிகள், குளங்கள், இதர சிறு பாசன குட்டைகள் உள்ளன. இந்த நீா்நிலைகள் ஆண்டுதோறும் பொதுப் பணித் துறை, மீன்வளத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் வருவாய்த் துறை வாயிலாக மீன்பாசி குத்தகைக்கு விடப்பட்டு அரசுக்கு வருவாய் ஈட்டும் நடைமுறை உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசுத் துறைகளுக்குச் சொந்தமான நீா்நிலைகளை ஊராட்சித் தலைவா்கள் அல்லது அவா்களைச் சாா்ந்த தனி நபா்கள் குழுவாக இணைந்து அரசு விதிமுறைகளுக்கு மாறாக எவ்வித அலுவலக நடைமுறைகளையும் பின்பற்றாமலும், சட்ட விதிகளுக்கு உள்படாமலும் பொது ஏலம் விடும் நடைமுறை சில கிராமங்களில் நடைபெற்று வருவதாக தகவல் வருகிறது.
சட்டத்துக்குப் புறம்பான பொது ஏலம் விடுபவா் மற்றும் மீன் பிடிப்பவா் மீது அபராதம் விதிக்கப்பட்டு, மீன்கள், வலைகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் மோகன் தெரிவித்தாா்.