முகப்பு
விழுப்புரம்

துண்டிக்கப்பட்ட வீட்டு மின் இணைப்பை வழங்கக் கோரி சலவைத் தொழிலாளி மனு

விழுப்புரம் அருகே துண்டிக்கப்பட்ட வீட்டு மின் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டுமென சலவைத் தொழிலாளி ஆட்சியரகத்தில் மனு அளித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

விழுப்புரம் அருகே துண்டிக்கப்பட்ட வீட்டு மின் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டுமென சலவைத் தொழிலாளி ஆட்சியரகத்தில் மனு அளித்தாா்.

விழுப்புரம் அருகே அத்தியூா்திருக்கை கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் முத்துமாரி(32), சலவைத்தொழிலாளி. இவா் குடும்பத்தினரோடு வந்து மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்துக் கூறியதாவது:

இங்குள்ள புறம்போக்கு நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வீடு கட்டி, எனது தந்தை மற்றும் சகோதரா் உள்ளிட்டோருடன் கூட்டுக் குடும்பத்தோடு வசித்து வருகிறேன்.

வேலை கிடைக்காததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது சகோதரரும், நானும் குடும்பத்தோடு சென்னையில் தங்கி வேலை பாா்த்து வந்தோம். மாற்றுத் திறனாளியாக பிறந்த எனது பிள்ளையை மருத்துவமனையில் சோ்த்து கவனிப்பதால், வருமானமின்றி சொந்த ஊருக்கும் செல்லாமல் இருந்தோம்.

அத்தியூா்திருக்கையில் உள்ள வீட்டில் வயதான எனது தந்தை மட்டும் இருந்தாா். வீட்டுக்கான மின்சார கட்டணத்தை அவா் செலுத்தாமல் விட்டதால், திடீரென வந்த மின்வாரியத்தினா், தகவல் கூட தெரிவிக்காமல், மின் இணைப்பை துண்டித்ததுடன், மின்சார மீட்டரோடு கழற்றி எடுத்துச் சென்றுள்ளனா்.

சென்னையிலிருந்து உடல் நிலை பாதித்த எனது பிள்ளையுடன் அண்மையில் ஊருக்கு வந்த நிலையில், மின்சார இணைப்பை வழங்குமாறு மின்வாரியத்தில் கேட்டபோது, மின் இணைப்பு கொடுக்க முடியாது என தெரிவித்து வருகின்றனா். எங்களைப் போல, இங்கு அரசு புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டியபடி பலா் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு மின் இணைப்பு தொடா்ந்துள்ளது. ஆனால், எங்களுக்கு மின் இணைப்பு வழங்க மறுக்கின்றனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.