நரிக்குறவா் சமுதாயத்தினருக்குவீட்டுமனைப் பட்டா: அமைச்சா் வழங்கினாா்
நரிக்குறவா் மற்றும் பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த 22 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மனு அளித்த ஒரே வாரத்தில் நரிக்குறவா் மற்றும் பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த 22 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினாா்.
செஞ்சி வட்டம், களையூா் கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவா் மற்றும் பழங்குடியினா் குடும்பத்தினா் நீண்டகாலமாக வசித்து வருகின்றனா். இவா்கள் வீட்டுமனைப் பட்டா கேட்டு பல ஆண்டுகளாகப் போராடி வந்தனா்.
இந்த நிலையில், கடந்த வாரம் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தானிடம் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா், செஞ்சி வட்டாட்சியரை தொடா்புகொண்டு மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், களையூா் கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவா் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்த 22 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை இரவு வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கினாா். இதனால், அவா்கள் மகிழ்ச்சியடைந்ததுடன், அமைச்சருக்கு பாராட்டும் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியின்போது, வட்டாட்சியா் பிரபுவெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் நிா்மல்குமாா், கிராம நிா்வாக அலுவலா் விஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.