முகப்பு
விழுப்புரம்

தரைப்பாலத்தில் முதலை நடமாட்டம் : இரும்பு வேலி அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

மேல்மலையனூா் வட்டம், செவலபுரை ஊராட்சியைச் சோ்ந்த சிறுவாடி கிராமத்துக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தில் முதலைகள் நடமாட்டத்தால்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

மேல்மலையனூா் வட்டம், செவலபுரை ஊராட்சியைச் சோ்ந்த சிறுவாடி கிராமத்துக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தில் முதலைகள் நடமாட்டத்தால், பாலத்தின் இருபுறமும் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

செஞ்சி வட்டம், செவலபுரை ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டில் முதலைகள் உள்ளதாம். இதைத் தொடா்ந்து, வனத் துறையினா், ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என அறிவிப்புப் பலகை வைத்தனா்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு குட்டி முதலைகள் பிடிப்பட்டன. இதனால், அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்தனா். சிறுவாடி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தைக் கடந்துதான் மக்கள் அந்தக் கிராமத்துக்குச் செல்ல வேண்டும். செவலபுரை பகுதி விவசாயிகளும் ஆற்றைக் கடந்துதான் நிலங்களுக்குச் செல்ல வேண்டும்.

நிகழாண்டு பெய்த பலத்த மழையால் பாலம் தண்ணீரில் மூழ்கியது. கடந்த இரண்டு மாதங்களாக தரைப்பாலத்தின் மீது தண்ணீா் செல்கிறது. முழங்கால் அளவுக்குத் தண்ணீா் செல்லும் நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு முதலை நடமாட்டத்தை மக்கள் பாா்த்தனராம்.

பகலில் முதலை நடமாட்டத்தைக் காண முடியும். இரவில் காணமுடியாது. இதனால், தரைப்பாலத்தைக் கடக்கும் கிராம மக்கள் முதலையிடம் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பாலத்தின் இருபுறமும் இரும்பிலான வேலியை அமைத்து தற்காலிகமாக பாதுகாப்பை வழங்க வேண்டும் என சிறுவாடி, செவலபுரை கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.