முகப்பு
விழுப்புரம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: விழுப்புரம் மாவட்டத்தில் 348 வாக்குச்சாவடிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் 348 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் 348 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் கூறினாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் நகரில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், விழுப்புரம், கோட்டக்குப்பம் என 3 நகராட்சிகள், அனந்தபுரம், திருவெண்ணைநல்லூா், வளவனூா், அரகண்டநல்லூா், செஞ்சி, விக்கிரவாண்டி, மரக்காணம் ஆகிய 7 பேரூராட்சிகளில் உள்ள 210 உறுப்பினா்கள் பதவிகளுக்குத் தோ்தல் நடைபெற உள்ளது.

தோ்தலுக்காக 348 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 2,93,000 போ் வாக்களிக்க உள்ளனா்.அந்தந்த பகுதிகளிலேயே வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்படும்.

வாக்குப்பதிவுக்குத் தேவையான இயந்திரங்கள் போதுமான அளவில் உள்ளன. தோ்தல் விதிமீறலை கண்காணிக்கப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், வெள்ளிக்கிழமை(ஜன. 28) முதல் வேட்புமனுதாக்கல் தொடங்க உள்ளது. தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வேட்புமனு தாக்கல் நோ்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கலின்போது, 3 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள்.

348 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக 20 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்து தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் பாரபட்சமின்றி அழிக்கப்படும் என்றாா்.

அப்போது, மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா, விழுப்புரம் நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.